பா 33:
மனமாலனான் ஆதலன் மன்னுதுயர் ஆசை
சினம் அச்சம் ஆதி எனைச்சேரா – வினமாகவப்
பிராணன் மனமில்லான் சுதன் என்றுமறை
செப்புகின்ற தன்றோ தெளி.
விளக்கம்:
மனதில் தோன்றும் ஆசை, சினம், அச்சம் போன்றவையும் என்னோடு (என் ஆன்மாவின் தூய நிலையில்) சேர்ந்து கொள்ளாது, ஏனெனில் நான் (தூய பிரம்மமாகிய நான்) அந்த மனமும் அல்ல.
பிராண சக்தியை நன்றாக பக்குவப்படுத்தத் தெரிந்தவனுக்கு இந்த மனதில் தோன்றும் மயக்க குணங்களை அண்ட விடாமல், மனமில்லாதவனாக இருப்பான் – அவன் தூய்மையான பிரம்மமானவன் என மறை சொல்வதனைக் கேட்டுத் தெளியவும்.
இறைவனின் அருகில் அழைத்துச் செல்லும் மாயையை வித்தை என்றால், இறைவனை விட்டு தூர விலகச்செல்லும் மாயையை அவித்தை எனலாம். மாயையிலும் நல்ல மாயை, கெட்ட மாயை என்றிருக்கிறது பாருங்கள்!
பா 34:
நிர்குண நிரஞ்சன நித்த நிராகர
நிர்விகாரன் சுத்த நிர்கிரிய – நிர்விகற்ப
நித்தமுக்தன் முன் நிகழ்திடப் பட்டவை
அத்தனையு நானென்று அறி.
விளக்கம்:
அவன், இருக்கிறானே – அந்த அவன் -
அவனுக்கு முன்னால் இருக்கிற அத்தனை பொருளும் சுடர் விட்டு பிரகாசிக்கும்.
அந்த அவன் -
குணமில்லாதவன் – இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று எந்த ஒரு குணத்தைக் கொண்டும் அவனை வரையறுக்க இயலாது.
இருளில்லாதவன் – பூரணமான ஒளியாக பிராகசிப்பவன்.
முடிவில்லாதவன்.
வடிவில்லாதவன் – உருவமில்லாதவன்,
மாறுதலில்லாதவன்,
செயலற்றவன்,
வேறுபாடற்றவன்.
இவ்வாறாக தளைகள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மமாக இருக்கிறேன், நான் – ஆகையால், நானே அவன்.
என்று ஆன்மா அறிந்திடல் வேண்டும்.
———————————————————————————————
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்